குண்டலினி - மூலாதாரம்.
மூலாதாரம் என்பது கருவாய்க்கும், எருவாய்க்கும் இடையே இருப்பதாக முன்னரே பார்த்தோம். சித்தர்கள் இந்த மூலாதாரத்தின் இடத்தினை மிகத் தெளிவாக விளக்கியிருக்கின்றனர்.
திருமூலர் தனது திருமந்திரத்தில் பின் வருமாறு விளக்குகிறார்....
நாபிக்குக் கீழே பன்னிரண்டு அங்குலம்
தாபிக்கும் மந்திரம் தன்னை அறிகிலர்
தாபிக்கும் மந்திரம் தன்னை அறிந்தபின்
கூவிக் கொண்டு ஈசன் குடியிருந்தானே
- திருமூலர்.
போகரும் தனது போகர் ஏழாயிரம் நூலில் பின் வருமாறு விளக்குகிறார்...
அகாரத்தின் மேலாகக் கணேசர் நிற்பார்
அதிலே யோர்கோணத் திலுகாரம் நிற்கும்
உகாரத்தில் வல்லபையாம் சக்தி நிற்பாள்
ஒடுங்கிய தோர்முனை யொன்றில் கதலிப்பூவாய்
புகாரமாய் முகங்கீழ்க் குண்டலியாம் சக்தி
பெண்பாம்பு போல்சுருட்டிச் சீறிக் கொண்டு
சுகாரமாய்ச் சுழிமுனையூ டுருவி நிற்பாள்
துரியாதீ தம்மென்ற வவத்தை தானே
- போகர்.
மூலாதாரச் சக்கரமானது பிறப்பு உறுப்பிற்கும் ஆசனவாய்க்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ளது. அது இடை, பிங்கலை, சுழுமுனை என்கிற மூன்று நாடிகள் சேரும் இடத்தில் உள்ளது. இன்னும் துல்லியமாக சொல்வதானால் ஆசனத்திற்கு இரண்டு விரற்கிடை மேலும், பிறப்பு உறுப்புக்கு இரு விரற்கிடை கீழும் உள்ள நான்கு விரற்கிடை அளவுள்ள இடத்திலேயே மூலாதார சக்கரம் இருக்கின்றது.
உடலில் இருக்கும் மற்றச் சக்கரங்களைத் தாங்குவதால் இதனை ஆதார சக்கரம் என்கின்றனர். அதாவது மற்றச் சக்கரங்களுக்கு தேவையான சக்தியைத் தரக் கூடிய குண்டலினி இச்சக்கரத்தில் தான் சுருண்டு படுத்துள்ளது. இச்சக்கரத்தில் இருந்து நான்கு முக்கிய நாடிகள் வெளிக் கிளம்புகின்றன. அவை தாமரையின் நான்கு இதழ்கள் போல் தோற்றமளிக்கும். ஒவ்வொரு நாடியின் அசைவினால் ஏற்படும் சப்தங்கள் "வ ஸ ச ஷ" என்ற எழுத்துக்களால் குறிக்கப்படுகின்றன.
அகத்தியர் தனது பாடலில் விவரித்திருக்கும் மூலாதார சக்கரத்தின் மாதிரி படம் இது.
இந்த நான்கு எழுத்துக்களும் முறையே மனம், புத்தி, சித்தம், அகங்காரம் குறிக்கிறது என்கின்றனர் சித்தர் பெருமக்கள்.
இச்சகக்கரத்தின் மத்தியிலுள்ள யோனிக்கு “காமம்”என்று பெயர். அதையே சித்தர்கள் தொழுகிறார்கள். இங்குதான் குண்டலினி தூங்குவது போல் அசைவற்றுக் கிடக்கிறது. இச்சக்கரத்தின் அதிதேவன் வினாயகர், அதிதேவதை டாகினி/தாகினி என்று குறிப்பிடப்படுகிறது. இந்த மூலாதார சக்கரத்தின் பீஜ மந்திரமாக "லம்" என்பது குறிப்பிடப்படுகின்றது.
பஞ்சபூதங்களில் ஒன்றான பூமி இந்த் சக்கரத்தின் மூலக்கூறாக கூறப் படுகிறது. சிறுநீரகம் தொடர்புடைய உறுப்பாக கூறப்படுகிறது.
குருவருளின் துனையோடும், வழிகாட்டுதலோடும் தனிமையான இடத்தில் அமர்ந்து மூலாதார சக்கரத்தை மனதில் நிறுத்தி மூல மந்திரத்தை உருவேற்றிட குண்டலினி விழித்துக் கொள்ளும். இதனை தன் உணர்வுகளால் மட்டுமே அறிய முடியும். மூலாதாரத்தில் வெப்பம் உருவாவது, மூலாதாரத்தில் பரபரவென எதோவொன்று ஊறும் உணர்வு, உடல் புல்லரித்தல் போன்ற அனுபவங்களை நான் உணர்ந்திருக்கிறேன்.
குண்டலினி விழித்துக் கொண்டவர்களுக்கு கடுமையான பசியும், அதிக தூக்கமும் உண்டாகும்.
குண்டலினி விழித்துக் கொண்டவர்களுக்கு கடுமையான பசியும், அதிக தூக்கமும் உண்டாகும்.

Comments
Post a Comment