மூக்குப் பொடி பற்றி தற்போதைய தலைமுறையினருக்கு, அதிலும் குறிப்பாக நகர்ப்புற இளையோருக்கு பெரிதாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒன்றிரண்டு தசாப்தங்களுக்கு முன் வரை மூக்குப் பொடியை ஆண், பெண் வித்தியாசம் இல்லாமல் பெரும்பாலானவர்கள் பழக்கத்தில் வைத்திருந்தனர்.
நமது மூக்கின் உள்ளே அநேக வர்மப் புள்ளிகள் உள்ளன. இவற்றை கண்ணாடி வர்மம் என வர்ம நூல்களில் குறிப்பிடப் பட்டிருக்கிறது. காரத் தன்மை உடைய பொருள்களால் தயாரிக்கப் படும் மூக்குப் பொடியினை உறிஞ்சும் போது இந்த வர்மப் புள்ளிகள் தூண்டப் பட்டு மூளையில் ஒரு விதமான சிலிர்ப்பினை உண்டாக்குகின்றன. இதனால் உண்டாகும் கிறுகிறுப்புக்கு, மூக்குப் பொடியை பயன்படுத்துபவர் நாள் போக்கில் அடிமையாகி விடுவார்கள்.
பலன் என்று பார்த்தால் இந்த சிலிர்ப்பு உணர்வினால் உண்டாகும் தும்மலினால் மூக்கில் சேர்ந்திருக்கும் நீர், நுண்ணியியிரிகள் வெளித் தள்ளப் படுகிறது. புகைப் பிடிப்பது, புகையிலை மெல்லுவதைப் போல உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் பழக்கவழக்கமாக மருத்துவம் இதை வகைப் படுத்துகிறது. உயிர் கொல்லி நோயான புற்று நோயை வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கக் கூடியது இந்த பழக்கம்.
ஆனால் போகர் இந்த மூக்குப் பொடியைப் பற்றியும் அதன் பலனைப் பற்றியும் வேறுவிதமாக கூறியிருக்கிறார். தனது “போகர் 7000” என்ற நூலில் உள்ள ஒரு பாடல் பின்வருமாறு...
போடவே மூக்குப் பொடியைக்கேளு
பெரிதான வறட்டிசுண்டி வேரைவாங்கி
நீடவே நிழல்உலர்த்திப் பொடியாய்ப்பண்ணி
நெரிசாய சீலைவடி கட்டிக்கொண்டு
தேடவே குடுக்கைதனில் அடைத்துவைத்துச்
சிறியதாக நுனிவிரலில் பிடித்துகொண்டு
வாடவே வாசியோடு உற்றிவாங்கி
மவுனமாம் சிகரத்தால் ரேசிப்பாயே
ரேசித்தால் நிராகாரத் தடைப்புநீங்கி
நின்மலமாம் அதீதத்தின் ஒளியோமீறும்
தூசித்தால் சுழிமுனைதான் எட்டிட்டுஏறும்
தூசான அழுக்கெல்லாம் சிந்திவீழும்
காசித்த கபாலமது கெட்டியாகும்
கண்ஒளிதான் கேசரத்தில் நின்றுபார்க்கில்
ஆசித்த வடுக்காறு முருவிக்காணும்
அந்தரத்தின் ஒளியெல்லாம் அருகுமாமே.
- போகர்.
வறட்டி சுண்டி வேரைக் கொண்டுவந்து நிழலில் உலர்த்தி பொடியாக்கிக் கொள்ள வேண்டுமாம். பின்னர் அதை சீலை வடி கட்டி குடுக்கையில் அடைத்துக் கொள்ளவேண்டுமாம். இப்படி தயார் செய்த மூக்குப் பொடியினை அவ்வப்போது நுனி விரல்களினால் பிடியளவு எடுத்து சுவாசத்துடன் உறிஞ்சிட வேண்டும் என்கிறார்.
இப்படி உறிஞ்சி வந்தால் நிர்மலமான அதீதத்தின் ஒளிமீறுமாம். மேலும் தூசான அழுக்கெல்லாம் சிந்தி வீழுமாம். கபாலம் இறுகி கெட்டியாகும் என்கிறார். முக்கியமாய் கேசரத்தில் நின்று பார்த்தால் எல்லாம் கண்களுக்கு தோன்ற ஆரம்பிக்குமாம். அந்தரத்தின் ஒளி எல்லாம் கூட உணர முடியும் என்கிறார் போகர்.

Comments
Post a Comment