ஏழை பணக்காரன் என்கிற வித்தியாசம் இல்லாமல், வெப்ப மண்டல நாடுகளில் வாழ்கிறவர்கள் சந்திக்கிற ஒரு உடலியல் நிகழ்வு வியர்வை. இந்த வியர்வை என்பது மனித ஆரோக்கியத்திற்கு அவசியமான ஒன்று, ஏனெனில் மனித உடலின் கழிவுகள் வியர்வை வழியாகவும் வெளியேறுகின்றன. இந்த வியர்வையின் நாற்றம் தவிர்க்க இயலாதது. சிலருடைய உடலில் இருந்து வெளியாகும் வியர்வை கற்றாழை மணத்துடன் மிகுந்த துர் நாற்றத்துடன், பக்கத்திலிருப்பவர்கள் முகம்சுழிக்கும் அளவிற்கு இருக்கும்.
தற்போது இதனை தவிர்க்க நிறைய வாசனாதி திரவியங்கள் சந்தைக்கு வந்து விட்டாலும் கூட, அவை எல்லாம் செயற்கையான வேதிப் பொருட்களில் இருந்து தயாரிக்கப் படுபவை. இதனால் தற்காலிகமாக வியர்வை நாற்றத்தை தவிர்க்கலாமே ஒழிய நீண்டகால நோக்கில் உடலுக்கு தீங்கே விளையும்.
இத்தகைய வியர்வை நாற்றத்தைப் போக்க புலிப்பாணிச் சித்தர் தனது புலிப்பாணி வைத்ய சாரம் என்னும் நூலில் ஒரு எளிய வழியைக் குறிப்பிடுகிறார்..
உலகினிலே மானிடர்க்குக் கற்றாழை நாற்றம்
ஓடிவிடச் சாந்தொன்று உரைக்கைக் கேளு
நல்நாரி கரந்தையுட வேருங்கூட
நன்னாரி வேருடனே முத்தக்காசு
சூலமிலகுங் கஸ்தூரி மஞ்சள் தானும் கூட்டியே
வகைவகைக்கு வராக னைந்து
கலகமிலை யரைத்ததனை முகட்டில் பூசக்
கண்டோடுங் கற்றாழை நாற்றமே.
-புலிப்பாணிச் சித்தர்
நல்நாரி கரந்தை வேர், நன்னாரி வேர், கஸ்தூரி மஞ்சள் ஆகியவை ஒவ்வொன்றும் ஐந்து வராகன் எடை அளவு எடுத்து அவற்றை சேர்த்து அரைத்து சாந்து பக்குவத்தில் கக்கத்தில் பூசிக்கொள்ள உடலில் வீசும் துர்நாற்றம் அற்று விடும் என்கிறார் புலிப்பாணி.
இந்த சரக்குகள் எல்லாமே தற்போது எல்லா நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது. விலையும் மிக மலிவு. இயற்கையான இந்த மருந்தினை நாம் வீட்டிலேயே தயாரித்து பலன் பெற்றிடலாம்.

Comments
Post a Comment