சித்தர்களின் மரபியல் குரு, சிஷ்ய பாரம்பரியத்தின் மீது கட்டமைக்கப் பட்டது. இங்கே குருவே எல்லாவற்றுக்கும் மேலானவராகவும், இறை நிலைக்கு இனையானவராகவும் வைத்துப் போற்றப் படுகின்றனர். குருவை வணங்குவதும் அவர் வழி நிற்றலுமே மேன்மையாக போற்றப் பட்டிருக்கிறது. இத்தனை மகத்துவம் வாய்ந்த இந்த பாரம்பர்யத்தை அறிந்து தெளிய நினைக்கும் எவரும் குரு வழிபாட்டினைப் பற்றி அறிந்திருக்க வேண்டியது அவசியம்.
சித்தர்களின் எந்த ஒரு செயலும், முயற்சியும் தங்களின் குருவினை முன் வைத்தே துவங்கியிருக்கின்றனர். ஒவ்வொரு சீடரும் தன் குருவினை தியானிக்கவும், வணங்கிடவும் தனித்துவமான சூட்சும மூல மந்திரங்களை பயன் படுத்தினர். இதன் பின்னால் இருக்கும் மகத்துவம் நமக்கு பிடிபடாவிடினும் இதன் காரண காரியங்களை குருமுகமாக நிச்சயம் பெற இயலும்.
நந்தீசர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ நந்தீச சித்த சுவாமியே போற்றி!"
அகத்தியர் மூல மந்திரம்...
“ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி!”
திருமூலர் மூல மந்த்திரம்...
"ஓம் ஸ்ரீம் கெம் ஸ்ரீ மூலநாத சித்த சுவாமியே போற்றி!"
போகர் மூல மந்திரம்...
"ஓம் ஆம் ஊம் ஸ்ரீ மகாபோகர் சித்த சுவாமியே போற்றி!"
கோரக்கர் மூல மந்திரம்...
“ஓம் ஸ்ரீம் க்லம் ஸ்ரீ கோரக்க சித்த சுவாமியே போற்றி!"
தேரையர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் லபம் நசீம் ஸ்ரீ தேரைய சித்த சுவாமியே போற்றி!"
சுந்தரானந்தர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் ஆம் ஊம் ஸ்ரீ சுந்தரானந்த சித்த சுவாமியே போற்றி!"
புலிப்பாணி மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் கிலீம் ஸ்ரீ புலிப்பாணி சித்த சுவாமியே போற்றி!"
பாம்பாட்டி சித்தர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் வசி ஸ்ரீ பாம்பாட்டி சித்த சுவாமியே போற்றி!"
காக புசண்டர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் லம் ஸ்வம் ஸ்ரீ காக புசண்ட சித்த சுவாமியே போற்றி!"
இடைக்காடர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் ருணம் ஸ்ரீ இடைக்காட்டு சித்த சுவாமியே போற்றி!"
சட்டைமுனி மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் சம் வம் சட்டைமுனி சுவாமியே போற்றி!"
அகப்பேய் சித்தர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் சௌம் ஸ்ரீ அகப்பேய் சித்த சுவாமியே போற்றி!"
கொங்கணவர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் நசீம் ஸ்ரீ கொங்கண சித்த சுவாமியே போற்றி!"
சிவவாக்கியர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ சிவவாக்கிய சித்த சுவாமியே போற்றி!"
உரோமரிஷி மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் கிலம் ஸ்ரீ உரோம ரிஷி சுவாமியே போற்றி!"
குதம்பை சித்தர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் சம் ஸ்ரீ குதம்பைச் சித்த சுவாமியே போற்றி!"
கருவூரார் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் வம் லம் ஸ்ரீ கருவூர் சித்த சுவாமியே போற்றி!"
குரு வணக்கமும், சித்தர் வணக்கமும் ஒன்றா?, என நேற்று நண்பர் ஒருவர் மின்னஞ்சலில் சந்தேகம் எழுப்பி இருந்தார். அது பற்றிய சில விவரங்களை தந்துவிட்டு நமது குரு வணக்கத்தை தொடர விரும்புகிறேன்.
சித்தர் வணக்கம் என்பது குழந்தைகள் குருகுல வாசத்தினை ஆரம்பிக்கும் போது குருவானவர் ”சித்தர் வணக்கம்” என்கிற மந்திரத்தை உச்சரித்து துவங்குவார். ‘‘ஹரி நமோத்து சிந்தம்’’ என்பதே சித்தர் வணக்க மந்திரம். நமக்கு முந்தைய தலைமுறை வரையில் பின்பற்றப் பட்ட இந்த பழக்கம் சமீப காலத்தில் வழக்கொழிந்து போய்விட்டது. மற்றபடி இந்த சித்தர் வணக்கத்துக்கும், சித்தர்கள் மரபியலுக்கும் தொடர்பிருப்பதாக தெரியவில்லை.
இன்னமும் துல்லியமாக சொல்வதானால் இந்த சித்தர் வணக்கம் சமண மதத்தோடு தொடர்புடையது என்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.திருத்தக்க தேவர் என்னும் சமண முனிவர் இயற்றிய சீவக சிந்தாமணி என்னும் நூலில் கடவுள் வாழ்த்தாக முதல் பாடலை சித்தர் வணக்கம் என்று பின்வருமாறு எழுதியிருக்கிறார்.
"மூவா முதலா உலகம் ஒரு மூன்றும் ஏத்தத்
தாவாத இன்பம் தலை ஆயது தன்னின் எய்தி
ஓவாது நின்ற குணத்து ஒள் நிதிச் செல்வன் என்ப
தேவாதி தேவன் அவன் சேவடி சேர்தும் அன்றே"
எனவே இந்த சித்தர் வணக்கத்திற்கும் நாம் எழுதிக் கொண்டிருக்கும் குரு வணக்கத்திற்கும் தொடர்பில்லை.
சித்தர்களுக்கான மூல மந்திரங்கள் ஒவ்வொன்றும் தொடர்புடைய சித்த புருஷர்களை என்றும் தங்கள் தொடர்பில் வைத்திருக்க சீடர்கள் பயன்படுத்திய சூட்சுமமாகவே கருதப் படுகிறது. இந்த மந்திரங்களை முறையாக பயன் படுத்துவதன் மூலம் தாங்கள் முன்னெடுக்கும் எந்த ஒரு செயலுக்கும் தங்கள் குருநாதரின் அருளும், ஆசியும் கிடைப்பதுடன்....சமயங்களில் அவர்களை நேரடியாக தரிசிக்கும் வாய்ப்புக் கூட கிட்டுமாம்.
குரு வணக்கமும்... குரு தரிசனமும்...!
ஆத்ம சுத்தியுடன், எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லாது குருவருளை நாடுவோர் மட்டுமே இத்தகைய முயற்சிகளில் ஈடுபட வேண்டும். கபட எண்ணங்களை முன்வைத்து செய்யப்படும் முயற்சிகள் தோல்வியில் முடியும். சித்தர்கள் என்பவர்கள் ஆசாபாசங்களை கடந்தவர்கள். வழிபாடுகள் என்கிற பெயரிலான ஆராதனைகளை அவர்கள் விரும்புவதும் இல்லை, ஏற்றுக் கொள்வதுமில்லை. ஆனால் இன்றைக்கு பலர் ஆயிரத்தெட்டு போற்றிகளை கொண்ட பூசை முறைகளை சித்தர்களுக்கானது என கூறிவருகின்றனர்.
இனி வணங்கும் முறையினை பார்ப்போம்....
அமைதி நிறைந்த தூய்மையான, வெளிச்சம் மிகுந்த அறையொன்றில், கிழக்கு முகமாய் நாம் வணங்க விரும்பும் சித்தரின் படம் ஒன்றினை வைத்து, அதன் முன்னால் ஒரு திரியினைக் கொண்ட விளக்கு ஒன்றினை ஏற்றி வைத்திட வேண்டும். சுத்தமான குவளை ஒன்றில் நீர் நிரப்பி வைக்க வேண்டும்.ஒரு அங்குலம் விட்டமும் மூன்று மில்லிமீட்டர் தடிப்பான ஒரு செப்பு நாணயம் ஒன்றை சித்தர் படத்தின் முன்னர் வைத்திட வேண்டும்.
இப்போது சித்தரின் படத்திற்கு முன்னால் ஒரு துணி விரித்து அதில் பத்மாசனத்தில் அமர வேண்டும். பத்மாசனத்தில் அமர சிரமப் படுவோர் சாதாரணமாக அமர்ந்து கொள்ளலாம். மூச்சினை சீராக்கி, உடம்பை தளர்த்தி அமைதி நிலைக்கு வர வேண்டும். இந்த தருணத்தில் முந்தைய பதிவில் நாம் குறிப்பிட்ட மூல மந்திரத்தினை (நாம் வைத்த படத்திலுள்ள சித்தருக்குரிய) நூற்றியெட்டு முறை மனதில் மட்டுமே ஜெபிக்க வேண்டும். இந்த முறையில் தினமும் சூரிய உதயத்தின் போதும், அஸ்மனத்தின் போதும் தொடர்ந்து தினசரி இரண்டு முறை செய்திட வேண்டும்.
இந்த பூசை முறையில் சிலவற்றை ஒழுங்குடன் செய்தல் வேண்டும். ஒவ்வொரு முறையும் குரு வணக்கத்திற்கு முன்னர் குவளையில் புதிய நீர் நிரப்பிட வேண்டும். எக்காரணம் கொண்டும் மலர்களையோ, பழங்கள் அல்லது உணவு பொருட்களை படையல் போடுவது போன்றவற்றை செய்திடக் கூடாது. சித்தர்கள் புறவழிபாட்டினை வெறுப்பவர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இந்த முறையில் குரு வணக்கத்தினை எத்தனை ஆர்வத்துடனும், ஆத்ம சுத்தியுடனும் செய்து வருகிறோமோ அத்தனை விரைவில் நாம் வணங்கும் சித்தரின் அருளாசி கிடைக்கும். நமது முயற்சியின் தீவிரத்தினை பொறுத்து குறிப்பிட்ட அந்த மகா புருஷரின் திருவுருவ தரிசனமும் கிடைக்குமாம்.
மெய்யான குருவருள் நாடுவோருக்கு இந்த முறை கிடைத்தற்கரிய ஒரு வாய்ப்பு.
குருவின் பாதம் பணிவோம்.
ஆன்மிகத்தில் தன்னையறிதலையே ஞானம் என்கிறோம். ஞானம் என்பது சலனமில்லாத பரிபூரணநிலை. இந்த ஞானம் எப்போதும் நமக்குள்ளேதான் இருக்கிறது. அதை உணரவைத்து, உற்றுநோக்கி உறையவும் தெளியவும் மெய்யான குருவின் வழிகாட்டுதல் அவசியமாகிறது.
இந்த பரிபூரண நிலையே சித்த நிலை அல்லது சமாதி என்கிறோம். சித்தநிலை என்பது எதிர்பார்ப்பில்லாதது.. கருணையும், அன்பும் பெருகியநிலை. தாமே அதுவாக உணர்ந்த உயரியநிலை. இந்த நிலையை எய்தியவர்கள் எவரும் தங்களைத் தாங்களே குரு எனச் சொல்லிக் கொள்வதுமில்லை. அல்லது தங்களுக்கென குருபீடம் அமைத்துக் கொண்டு பொய்யான மதங்களையும், மந்தைகளையும் உருவாக்குவதுமில்லை. அப்படி செய்கிறவர்கள் போலியானவர்கள்..
தகுதியானவர்கள் ஞானத்தேடலை உணர்ந்த மெய்யான குரு அவர்களைத் தேடி வந்து ஆட்கொண்டு வழிநடத்துவார். அப்போது அந்த மேலான குருவின் பாதங்களை கள்ளமனமின்றி பற்றி பணிந்து பயன்பெற வேண்டும் என்கிறார் பாம்பாட்டி சித்தர்.
"உள்ளங்கையிற் கனிபோல பொருளை
உண்மையுடன் காட்டவல்ல உண்மைக் குருவைக்
கள்ளமனந் தன்னைகத் தள்ளிக்கண்டு கொண்டன்பாய்க்
களித்துக் களித்து நின்று ஆடுபாம்பே".


Comments
Post a Comment