இலங்கையின் தென் கிழக்கு கோடியில் உள்ள ஊர் கதிர்காமம். பழைய நூல்களில் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக இதை குறிப்பிடப் படுவதுண்டு. அருணகிரி நாதரும் கூட தனது திருப்புகழில் பதினான்கு பாடல்களை கதிர்காமத்தில் உறையும் கந்தன் மீது பாடியிருக்கிறார். இந்த கோவில் பதினோராம் நூற்றாண்டில் உருவாகி இருக்கலாம் என்று கூறுகின்றனர்.
மணி தரளம் வீசி, அணி அருவி சூழ,
மருவு கதிர்காமப் பெருமாள் காண்!
அரவு பிறை வாரி, விரவு சடை வேணி
அமலர் குரு நாதப் பெருமாள் காண்!
-அருணகிரிநாதர்
அம்பாந்தோட்டை மாவட்டதில் திசமாறகம என்னும் இடத்தில், மாணிக்க கங்கை என்னும் ஆற்றை ஒட்டி இந்த ஆலயம் அமைந்துள்ளது. சிங்களவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் ஒரு பழமை வாய்ந்த தமிழ் கடவுளின் கோவில் எந்த வித இடையூறும் இல்லாமல் இருந்து வருவது பலருக்கும் புதிய செய்தியாக இருக்கும்.
இந்துக்கள், இஸ்லாமியர்கள், பவுத்தர்கள் மூவருக்கும் பொதுவானதாக இந்த கோவில் இருந்து வருகிறது.எல்லா மதங்களின் விழாக்களும் இங்கே பாகுபாடின்றி கொண்டாடப் படுகிறது.இங்கு இறைவனுக்கு பூசை செய்பவர் வாயில் துணியை கட்டிக் கொண்டுதான் பூசை செய்வார்.எந்த வித மந்திர உச்சாடனங்களும் இங்கே கிடையாது. இப்படி பூசை செய்பவரை “கப்புறாளை” என்று அழைக்கின்றனர்.
ஆச்சர்யத்தில் எல்லாம் ஆச்சர்யமாக இங்கே முருகனுக்கு சிலை கிடையாது. வள்ளி,தேவயானை சமேதராக முருகன் அருள்பாலிக்கும் ஓவியம் தீட்டப் பட்ட ஒரு திரை மட்டுமே தொங்க விடப்பட்டிருக்கும். அந்த திரைக்கே பூசைகள் நடைபெறும்.
அப்படியானால் இந்த திரைக்கு பின்னால் என்னதான் இருக்கிறது? இந்த பதிவின் நோக்கமே அதை விளக்குவதுதான்...
இந்த திரைக்குப் பின்னால் ஒரு சிறிய அறை இருக்கிறது. பூசை செய்பவரைத் தவிர வேறு யாருக்கும் இங்கே அனுமதி இல்லை. காற்றோ, வெளிச்சமோ நுழையாத இந்த அறையில், ஒரு பேழையில் அறுகோண யந்திரம் ஒன்று உள்ளது. இந்த யந்திரம் சூட்சுமமான சக்தி வாய்ந்தது என்கின்றனர் . இதனை உருவாக்கியவர் போகர் என இக்கோவிலில் குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. மேலும் பழநி தண்டாயுதபாணி சுவாமியை உருவாக்க பயன்படுத்திய அதே வகையான நவபாஷாணத்தால் இந்த யந்திரமும் செய்யப் பட்டிருப்பதாக தெரிகிறது. அந்த யந்திரத்தின் படம் கீழே....
இந்த யந்திரமே கதிர்காமத்து கந்தனாக உருவகிக்கப் பட்டு எல்லா மதத்தினராலும் காலம் காலமாய் வணங்கப் பட்டு வருகிறது. விழாக் காலங்களில் மட்டும் இந்த யந்திரம் அடங்கிய பேழையை யானை மீது வைத்து ஊர்வலமாய் கொண்டு வருகின்றனர்.

Comments
Post a Comment