நமது சமூக அமைப்பில் தாய்மையே ஒரு பெண்ணை பூரணத்துவமானவளாக ஆக்குகிறது, என்கிற நம்பிக்கை ஆழமாய் வேரோடியிருக்கிறது. ஒவ்வொரு பிரசவமும் ஒரு பெண்ணிற்கு மறுபிறவியைப் போன்றது என்கிற பேச்சு வழக்கு காலகாலமாய் புழக்கத்தில் உள்ள ஒரு சொலவடை.
நவீன அலோபதி மருத்துவத்தின் படி பிரசவம் இரண்டு பெரும் கூறுகளாய் அணுகப் படுகிறது.
1. யோனி வழிப் பிரசவம் (Normal vaginal Delivery).
இது இயற்கையாக குழந்தை பிரசவிக்கும் முறை.
2. சத்திர சிகிச்சை பிரசவம் (Caesarian Section).
இயற்கையாக குழந்தையை பிரசவிக்க முடியாத சூழ்நிலையில் மருத்துவர்கள் சத்திர சிகிச்சையின் மூலம் குழந்தையை பிரசவிக்க செய்யும் முறை.
எதனால் இயற்கையாக குழந்தையை பிரசவிக்க முடியாமல் போகிறது என்பதற்கு மருத்துவ ரீதியாக நிறைய காரணங்கள் முன் வைக்கப் படுகிறது.
பெண்ணின் வயது மற்றும் உடல் அமைப்பு
சூல் வித்தகம் கர்ப்பபையின் கழுத்துப்பகுதியை மறைத்திருத்தல் அல்லது மூடியிருத்தல் (Placenta praevia)
தாய்க்கு ஏற்படும் அதிக குருதிப் பெருக்கு ( Severe antepartum haemorrhage)
தாயின் குருதி அமுக்கம் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகரித்தல் (Severe pregnancy induced hypertention)
cephalopelvic disproportion (CPD)
Meconium or foetal distress
Severe intrauterine growth retardation
இது போன்ற தவிர்க்க இயலாத சூழல்களில் தாய் மற்றும் சேயின் உயிரை காப்பாற்றிட மருத்துவர்கள் சத்திர சிகிச்சையின் மூலம் குழந்தையை பிரசவிக்க செய்கின்றனர். இந்த முறையை சிசேரியன் சத்திர சிகிச்சை (Emergency caesarian section) என்பர்.
நவீன அறிவியலுக்கு இவை எல்லாம் சரிதான், ஆனால் அலோபதி மருத்துவம் வளராத பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் நமது தாய்மார்கள் இது மாதிரியான பிரச்சினைகளை எல்லாம் நிச்சயம் எதிர் கொண்டிருப்பார்கள். அதற்கு நம் பெரியவர்கள் என்ன மாதிரியான தீர்வினை வைத்திருந்தார்கள் என்பதைப் பற்றியதே இந்த பதிவு.
நான் தேடிய வரையில் சத்திர சிகிச்சை பிரசவம் பற்றி சித்தர் பாடல்களில் குறிப்புகள் எதுவும் காணக் கிடைக்கவில்லை. ஆயினும் இயற்கை பிரசவம் தடைப்படுவது பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. அப்படியான சூழல்களில் என்ன செய்திட வேண்டும் என்கிற தீர்வுகளும் அந்த பாடல்களில் இருக்கின்றது.
அந்த வகையில் அகத்தியர் தனது அகத்தியர் பரிபூரணம் என்னும் நூலில் குறிப்பிட்டுள்ள ஒரு சில குறிப்புகளை இன்று பார்க்கலாம்.
"காணடா பிறவியது னோக்குதற்கு
கருவாக சுண்டையுடன் வடவேர்வாங்கி
பூணடா சற்குருவை தியானம்பண்ணி
புத்தியுடன் வளையமிட்டு மஞ்சள்சாத்தி
பேணடா கால்விரலில் பூட்டினாக்கால்
பிள்ளையது தான்பிறக்கும் பெருமையாக
பாரப்பா யின்னமொன்று சொல்வேன்கேளு
பரிதான பெரண்டைவேர் கொன்னைவேரும்
நேரப்பா காடியிலே அரைத்துமைந்தா
நீமகனே தாங்குடுக்க பிறவினோக்குங்
காரப்பா அதிமதுரம் பொடியேசெய்து
கருணையுடன் தேனதிலே கொடுத்துப்பாரு
பாரப்பா பிறவியது தானேனோக்கி
பிள்ளையுமே சுகமாகப் பெறுவாள்பாரே."
- அகத்தியர்.
சுண்டை என்னும் மூலிகையின் வடக்கு பக்கமாக செல்லும் வேரை எடுத்து வந்து குருவருளை வேண்டி வணங்கி, வளையமாக செய்து மஞ்சள் பூசி கருவுற்ற பெண்ணின் கால் விரலில் அணிந்தால் குழந்தை சுகமாக பிறக்குமாம்.
அதே போல பிரண்டை வேரும் கொன்னை வேரும் காடி விட்டு அரைத்து கருவுற்ற பெண்ணுக்குக் கொடுக்க குழந்தை சுகமாக பிறக்குமாம்.
அதிமதுரத்தை பொடி செய்து தேனில் குழைத்து கொடுக்க குழந்தை சுகமாக பிறக்கும் என்கிறார்.

Comments
Post a Comment