மாற்றுப் பெயர்; ஆற்றுத்தும்மட்டி, குமட்டிக்காய், வலிக்காம்பட்டிகாய்
வளரியல்பு; தரையில் படர்ந்து வளரும் கொடி
மருத்துவ பாகம்: பூ,காய்
குணம்: கிருமிநாசினி, விஷநாசகாரி, மலகாரி, மூத்திரவர்தனகாரி
தீர்க்கும் நோய்கள்; இதனை தனியாக உள்ளுக்குக் கொடுப்பது இல்லை
பற்றுதிரப் பூச்ச்சிகளைப் பற்பலவா மந்தத்தைச்
சுற்றுதிரப் பித்தத்தை தூவிடத்தை – முற்று
மரிக்குமட்டி யாயிலைமா தங்கருரை யன்றோ
வரிக்குமட்டி யாயிலைமா தே
- வரிக்குமட்டி இலை ரத்தக்கிருமிகள், பலவிதமந்தம், ரத்தப்பித்தம், தசையைப் பற்றிய சர்ப்ப விஷம்,இவற்றை விரைவில் கெடுக்கும்.
கிடையெங்கே சோம்பலெங்கே கேடுறச்செய் வாதக்
கடையெங்கே யாற்றுக் கலிங்க – மடைதிறக்கி
னண்டை யடைச்சலெங்கே ஆயிழையார் சூதகத்தி
னுண்டை யுடைசலெங்கே யோது.
- ஆற்றுத்தும்மட்டிக்காயால் கீல் பிடிப்பால் நடையின்றிக் கிடத்தல், சோருதல், மலாவிருத முதலிய வாத ரோகங்கள்,கருப்பையைப் பற்றியடைகின்ற ஆமம், இரத்தக் குன்மக்கட்டி, அகால ருது இவை போம்.
1. விஷாமுர்த சூரணம்;சிறு தும்மட்டிக்காய்,பேய்ச்சுரை,பேய்ப்புடல்,பேய்ப் பீர்க்கு இவற்றின் சமூலம் சமன் பொடித்து வேளைக்குத் திரிகடி வெந்நீரில் அந்திசந்தி கொடுத்துவர சகல விஷ்ங்களும் முறிந்துவிடும்.
2. காய் மேல் தோல்,விதை நீக்கிப் பிழிந்தசாறு, ஆவின்பால் வகைக்கு 1 படி,சுத்தமான தேங்காய்பால் கால் படி,சிற்றாமணக்கெண்ணை 1படி, வெங்காயச்சாறு 1படி,கலந்து, கடுகு, பூண்டு,இந்துப்பு,வளையலுப்பு, பாறையுப்பு, வெடியுப்பு,சவுட்டுப்பு,கடுக்காய், கடுகுரோகிணி, அதிமதுரம், சுக்கு,மிளகு,திப்பிலி, ஓமம்,வாய்விளங்கம்,சீரகம்,சிற்றரத்தை,கோஷ்டம், சிறுநாகப்பூ, சன்ன லவங்கப் பட்டை வகைக்கு 5 கிராம் மேற்படித் திரவங்களில் ஏதாவதொன்றிலரைத்துக் கலந்து தைலம் வடித்து,காலை 15மிலி 3-5 நாள் கொடுக்க வாதநீர்,கிருமிகள், ஈரல்களின் வீக்கம்,நீர்க்கோவை,பெறும்வயிறு, இடுப்பு வலி, கீல்வாயு,ருதுசூலை தீரும். (சுமார் 4-5 பேதியாக வேண்டும். இல்லையெனில் அளவைக் கூட்டியோ குறைத்தோக் கொடுக்க வேண்டும்.)
3. ஒரு பழகிய பாண்டத்தில் 3 படிஆவின் நீர் விட்டு, இந்துப்பு,வளையலுப்பு, பாறையுப்பு, வெடியுப்பு,சவுட்டுப்பு வகைக்கு 40 கிராம் அரைத்துப் போட்டு,சிறு தீயில் எரித்து குழம்பு பதம் வரும்போது, பெரிய தும்மட்டிக்காய் 50ல் தோல், விதை நீக்கிப் பிழிந்த சாறு கலந்துக் கிளறி மெழுகுப் பதத்தில் எடுத்து, அந்தி சந்தி சுண்டைக்காய் அளவு கொடுத்துவர உதர ரோகத்தைக் குறிப்பிடும் படியான பெருவயிறு,மகோதரம், நீராம்பல், நீர்க்கோவை, கவுசி,கெண்டை, பீலிகை முதலிய நோய்கள் நிவர்த்தியாகும்.
4. காயை இரண்டாக வெட்டி உப்பில் தோய்த்து அழுத்தித் தேய்க்க புழுவெட்டு நீங்கி முடி முளைக்கும்.

Comments
Post a Comment