Skip to main content

கடுக்காய் Terminalia chebula அரிதகிக்காய்

 
அரிதகிக்காய் 
மாற்றுப்பெயர்   ; பச்சைக் கடுக்காய்                                       
வளரியல்பு ; இலையுதிர்மரம்
இலைஅமைப்பு ; மாற்றடுக்கில் நீள்வட்ட இலைகள்
பூ,காய் ; பளபளப்பான நீண்ட உருளை வடிவ காய்கள்
மருத்துவ பாகம் ;
குணம் ;  மலகாரி, ஜடராக்கினிவர்தினி

தீர்க்கும் நோய்கள் 
பச்சை யரிதகிக்காய் பண்ணும் வகைகேளா
பிச்சை யுறத்துவைத்துப் பிட்டழுத்தி – வைச்செடுத்துத்
தின்ன வரோசியறுந் தீபனமா முன்மலம்போ
மன்னநடை மாதே யறி
பச்சைக் கடுக்காயை கொட்டை நீக்கியிடித்து ,ஐந்திலொரு பங்கு உப்பிட்டு,15 நாள் சென்றபின் பிசைந்து அன்னத்தில் கலந்தோ தனித்தோ புசிக்கின் அரோசிகம் தீரும். பசியுண்டாம். மலங்கழியும்.

கடுக்காய் Terminalia chebula Retz.;Combretaceae

கடுக்காயுந் தாயும்கருதிலொன்றென் றாலுங்
கடுக்காய்த் தாய்க்கதிகங் காணீ – கடுக்காய்நோ
யோட்டி யுடற்றேற்று முற்றவன்னையோ சுவைக
ளூட்டி யுடற்றேற்று முவந்து.

கடுக்காயுந் தாயும் ஒன்றென ஒருவாறு நினைத்திருந்தாலும் தாயைப் பார்க்கிலும் கடுக்காயே அதிகமாம்.ஏனெனில் கடுக்காய் பிணிகளை நீக்கி உடலை தேற்றும்.தாயானவள் அறுசுவை ஊட்டி உடலை வளர்ப்பாள். பிணிகள் நீங்கினால் அல்லவோ உணவு பயன்பட்டு உடல் தேறும் எனும் வகையறியாமல் உணவை மாத்திரம் ஊட்டும் தாயினும் கடுக்காய் சிறந்ததென கூறினார்.

தாடைகழுத்தக்கி தாலுகுறியிவிடப்
பீடை சிலிபதமுற் பேதிமுட – மாடையெட்டாத்
தூலமிடி புண்வாத சோணிகா மாலையிரண் 
டாலமிடி போம்வரிக் காயால் .

கடுக்காயினால் கன்னம்,களம்,கண்,நா,ஆண்குறி இவ்விடத்து நோய்கள், பாத வன்மீகம், அதிசாரம், பங்குவாதம், அதிதூலம், வாதசோணித வாதம், காமிலம், தாவர சங்கம விஷங்கள் இவைபோம்.

செய்கை ; மலகாரி, சங்கோசனகாரி, தாதுக்ஷீணரோதி, ரக்தஸ்தம்பனகாரி, உதரவாதஹரகாரி.

விசயன் கடுக்காய்.

விசய னெனுங்கடுக்காய் வீரியத்தைச் சொல்வோ
நிசமதுதான் வாதத்தை நீக்கு – மிசையுரைக்கப்
பேய்ச்சுரைக்காய் போலிருக்கும் பேரவந்தி யாதேசம்
வாய்ச்சிருக்கு மக்காயை வாழ்த்து.

பேய்ச்சுரைக்காய்க் குறியுள்ள விஜயன் என்கிற கடுக்காய் வாதரோகத்தைப் போக்கும். இது அவந்தியா தேசத்தில் உற்பத்தியாம்.

அரோகிணிக் கடுக்காய்

ஓதும ரோகிணிக்கா யொண்றுண்டா னாற்சந்நி
பாதமொடு சீதம் பறக்குங்காண் – மீதுகுறி
நான்குவரி யாய்த்தோற்று நங்கா யதன்றேச
மாங்குகன்னி யாகுமரி யாம்.

கன்னியாகுமரி தேசத்தில் பிறக்கின்ற அரோகிணிக்கடுக்காயால் சன்னிபாதமும் சீதமும் நீங்கும்.இதன்மீது நாலுவரை போன்ற குறியிருக்கும்.

பிருத்திவிக்கடுக்காய்

தோற்றும் பிருதிவிதான் றோலாப் பயித்தியத்தை
மாற்றும் வயதை வளர்க்குமதன் – மேற்றோலோ
மெல்லியதா மக்காய் விளைதேச மேதென்னில்
வல்லசவு ராட்டிகமாம் வாழ்த்து.

மெல்லிய தோலுள்ள பிருதிவிக்கடுக்காய் பித்தநோயை நீக்கும். ஆயுளை விருத்தி செய்யும்.சவுராஷ்டிக தேசத்தில் உற்பத்தியாம்.

அமிர்தக்கடுக்காய்

அமிர்தமெனுங்கடுக்கா யம்புவியிலுள்ள
திமிர்தசி லேட்டுமத்தைத் தீர்க்கும் – விமிதச்
சதைப்பற்றுண்டா யிருக்குஞ் சாற்றிலதன் றேசங்
கதிக்கொத்த காசியென்பர் காண்.

விம்மிதித் தசை மிகுந்துள்ள அமிர்தக் கடுக்காய் கண்டத்தில் ஒரு ஒலியைத் தருகின்ற கபத்தை ஒழிக்கும்.காசி தேசத்தில் உற்பத்தி.

சிவந்திக்கடுக்காய்

சிவந்தி யெனுங்கடுக்காய் செய்கணத்தைக் கேள்வாய்
விவர்ந்தமூ லத்தையெலா மேய்க்குஞ் – சிவந்ததிகப்
பொன்னிறம தாயிருக்கும் பூங்குழலே யக்கடுக்காய்
துன்னுவனந் தோறுமுண்டாஞ் சொல்.

மிகுசிவப்பும் தங்கச்சாயலும் உள்ள சிவந்திக் கடுக்காயானது வாதமூல ரோகங்களை நீக்கும்.இது வனங்களில் உற்பத்தியாகும். 

திருவிருத்திக்கடுக்காய்

திருவிருத் திக்கடுக்காய் தேகத்தி னாளும்
வருவிரணம் போக்குமதன்வன்ன – மொருவிதமோ
பஞ்சவன்ன மூவரம்பு பற்றி யிருக்குமது
விஞ்சுமலை தோறுமுண் டாம்.   

வெள்ளை, கருமை, செம்மை, பசுமை, மஞ்சள் என்னும் பஞ்ச வருணமும், மூன்று வரிகளும் உடைய திருவிருத்திக்கடுக்காய் சகல விரணங்களையும் நிவர்த்தி செய்யும். இது மலைகளில் உற்பத்தியாம்.

அபயன்கடுக்காய்

அபய னெனுங்கடுக்கா யங்கநோயெல்லா
மபயமிட் டோட வடிக்கு – மபயற்
கதிக நிறங்கறுப்ப தாகும்விளை பூமி
பொதிய மலையாம் புகல்.
கருமை நிறத்தையுடைய அபயன் கடுக்காய் எலும்பைப் பற்றிய ரோகங்களை எல்லாம் நீக்கும்.இது பொதிகைமலையில் உற்பத்தியாம்.

கருங்கடுக்காய்
பழமலத்தைப் போக்கும் பகரி லுடலுக்
கழகுதரும் புத்தி யளிக்கும் – பழகி
மருங்கடுத்த வாதபித்த வன்கபத்தைத் தீர்க்குங்
கருங்கடுக்கா யென்றுளத்திற் காண்.

கருங்கடுக்காயானது பழைய மலக்கட்டையும் திரிதோஷ ரோகங்களையும் போக்கும்.அழகையும் அறிவையும் கொடுக்கும்.

செங்கடுக்காய்
சுத்தியொடு புத்திசுகமும் புகழுமுண்டா
மெத்தவொளிர் பொன்னிறமா மேனியெல்லாஞ் – சுத்தகப
வங்கடுத்த விளைபல வன்காச மும்மலமுஞ்
செங்கடுக்காய்க் கில்லையெனத் தேர்.

செங்கடுக்காய்க்கு  மலாசயச்சுத்தி, அறிவு, இன்பம், கீர்த்தி, சரீரத்தில் பொற்சாயல் ஆகியன உண்டாம்.தனிச் சிலேஷ்மக் கோழை,பலவித இருமல், மலக்கட்டு விலகும் என்க.

வரிக்கடுக்காய்
மிடுக்காக்குந்தேகத்தை விந்துவையுண் டாக்குஞ்
சடக்கெனவே டுண்டியையுட்சாடுந் – துடுக்கான
வாதபித்த மிவையகற்றும் வன்னியொடு நல்விதருஞ்
சாதி வரிக்கடுக்காய் தான்   

வரிக்கடுக்காய்
தேகபுஷ்டி, தாதுவிருத்தி, அசனசீரணம், சடராக்கினி, அழகு இவற்றை உண்டாக்கும். திரிதோஷங்களை நீக்கும்.

பால்கடுக்காய்
ஆமம்கெடுங்கா ணழகும் பொலிவுமிகுஞ்
சேமம் பெறுபலமுஞ் சேருமே – தாமநெடும்
வேற்கடைக்கண் கும்பமுலை மெல்லியலே யெப்போதும்
பாற்கடுக்கா யுண்பாரைப் பார்.

பால் கடுக்காய் சீத கிரகணி நீக்கும்.வனப்பு,தேஜஸ்,வன்மை விருத்தியாகும். 

கடுக்காய் பிஞ்சு

வனதுர்க்கிச் சேய்க்கு மணித்தயிலம்பூசி
யனலிற் பொரித்தாங் கருந்தத் – தினமுமலச்
சிக்கலக்க டுப்பநின்ற சீதமறுங் காற்றுகைத்த
முக்கலக் கடுப்பிருக்கு மோ  
செய்கை ;சங்கோசனகாரி, மலகாரி
கடுக்காய் பிஞ்சுக்கு ஆமணக்கு நெய் தடவி தீயில் வறுத்துத் தூள் செய்து அப்போதே யுண்டால் மலச்சிக்கலும்,எலும்பைப்போல் வெளுத்த சீதமும், போம். மூல வாயுவினால் பிறந்த முக்கலும்,ஆசனக் கடுப்பும் இருக்குமோ / இராது என்பது கருத்து.

கடுக்காய் பூ / கர்க்கடகசிங்கி

முக்கலையங் காசகய மூடு கிராணிமுளை
கக்கிரத்த பித்தங்கறைப் பேதி – யுட்குடலிற்
றங்கொலிநீர்ப் புண்சுரஞ்ச மீரம்விட வெப்பிவைபோஞ்
சிங்கியினாற் போகமுறுந் தேர்.
செய்கை ; சங்கோசனகாரி
கர்க்கடக சிங்கியினால் முக்கல்,ஆமம்,இருமல்,ஷயம்,கிரகணி,மூலமுளை, ரத்தபித்தம்,ரத்தபேதி,குடலிரைச்சல்.மேகவிரணம்,சுரம்,விஷசுரம், போம். வீரியம் உண்டாம். (கர்கடக சிங்கியானது கடுக்காய் மரத்தின் பூ அல்ல. இலைகளில் தடித்து தசை எழும்பி முறடுகட்டி இருப்பதாம்.இதற்கு மேற் கூறிய குணங்கள் பொருந்தியுள்ளது.)
  1. கடுக்காய் சூரணம் 10 -15 கிராம் 200மிலிநீரில் வற்றக்காய்ச்சி பிசைந்து வடித்துக் கொடுக்க மலம் தள்ளும்.அளவு அதிகப்பட்டிருப்பின் 2 -3 முறை பேதியாகும்.
  2. 1 தேகரண்டி சூரணத்துடன் பட்டை அல்லது கிராம்பு 2கிராம் சேர்த்து பால் அல்லது வெந்நீரில் காய்ச்சி ஆறியபின் 2-3 முறை பருக பேதியாகும்.இதனால் குமட்டல் வாந்தி,வயிற்றுவலி நீங்கும்.
  3. இத்துடன் வாதுமை நெய் அல்லது பசுவின் நெய் செர்த்துக் கொடுக்க வயிற்றுவலியைச் சாந்தப்படுத்தி விரோசனமாகும்.
  4. பற்பொடியுடன் கலந்து பல்துலக்கிவர ஈறுவலி,ஈறுகளில் இரத்தம் காணல் தீரும்.
  5. நசியமிட பீநிசம்(சைனஸ்) குணமாகும்.
  6. கசாயத்தைக் கொண்டு புண்களை கழுவ ஆறும்.
  7. இரத்தமூலம் கால் அலம்ப உதிரத்தை நிறுத்தும்.
  8. சூரணத்துடன் சிறிது காய்ச்சுக்கட்டி சூரணம் சேர்த்து தேனில் மத்தித்து நாவில் தடவ வாய்விரணம் ஆறும்.
  9. கடுக்காய்,நெல்லிவற்றல்,தான்றிக்காய்,காய்ச்சுக்கட்டி சமன் பொடித்து தேங்காய் எண்ணெய் அல்லது நெய் விட்டு அரைத்து ஆறாத புண்களுக்குப் போட ஆறும்.
  10. கடுக்காய் பிஞ்சை ஆமணக்கெண்ணையில் வறுத்துப் பொடித்து வற்றக் காய்ச்சிப் பிசைந்து இந்துப்புக் கூட்டிக் கொடுக்க 2-3முறை பேதியாகும்.இதனால் மூலச்சூடு,உஷ்ணவாயுவினாலெலுந்த ஆசனக் கடுப்பு,முக்கல் போம்.
  11. கடுக்காய் பூவை பொன்மேனியாக வறுத்து முலைப்பால் விட்டு சந்தனக்கல்லில் உரைத்துக் குழந்தைகளுக்குக் கொடுக்க பேதி,சீதபேதி, ஆசனக்கடுப்பு,முக்கல் இவை போம்.
  12. கடுக்காய்பூ,இலவங்கப்பட்டை,கிராம்பு தனித்தனியாக வறுத்துப் பொடித்து சம அளவு,3-5 கிராம், சர்க்கரை சேர்த்து தினம் 2 வேளை 3 நாள் கொடுக்க சீதபேதி, இரத்தபேதி, இரத்தமூலம் போம். இதனுடன் நாகபற்பம் 100மிகி கலந்து கொடுக்க பெருங் குணம் தரும்.
  13. பூ,சுக்கு,மிளகு,திப்பிலி,கடுக்காய்,நெல்லிக்காய்,தான்றிக்காய்,சிற்றரத்தை, கண்டங்கத்திரிவேர் சமன் பொடித்து வேளைக்குத் திரிகடி வெந்நீர் அல்லது தேனில் கொடுக்க ஈளை இருமல் போம்.
  14. கடுக்காய் பொடியுடன் பாதி எடை திராட்சைக் கலந்து அரைத்து 1-2 கிராம் காலையில் சாப்பிட்டுவர பித்தவாந்தி, தலைச்சுற்றல், வாய்க்கசப்பு தீரும்.

Comments

Popular Posts

லக்னமும் தொழில் அமைப்பும்

என்ன லக்னம் எந்த தொழில் செய்யலாம் மேஷம் லக்னமும் தொழில் அமைப்பும் மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஜீவன ஸ்தானாதிபதி சனி பகவானாவார். பொதுவாக, தொழில் காரகன் என வர்ணிக்கப்படக்கூடிய சனி பகவான் இந்த லக்னத்திற்கு 10ம் அதிபதி என்பதால் அவர் சுக்கிரன், புதன், குரு போன்றகிரகங்களின் சேர்க்கை பெற்று பலமாக அமையப் பெற்றால்,சொந்தத் தொழில்  செய்து அதன் மூலம் சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும். மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஜீவனாதிபதி சனியே பாதகாதிபதியாகவும் இருப்பதால், வேலையாட்களிடமும் ஸ்பெகுலேஷன் சார்ந்த தொழில்  விஷயங்களிலும் முதலீடு செய்கின்ற போது முன்னெச்சரிக்கையுடன் இருந்து நிலையான விஷயங்களில் மட்டும் முதலீடு செய்தால், லாபங்களை அடைய முடியும். 10ம் அதிபதி சனி பலமாக அமையப் பெற்று சுபர் பார்வையுடனிருந்தால் இரும்பு, எந்திரங்கள், வண்டி,வாகனங்களில்  மூலம் அனுகூலங்கள், பழைய பொருட்களை விற்பனை செய்யும் தொழில், கடின உடல் உழைப்பு சார்ந்த தொழில்கள் போன்றவற்றை செய்ய நேரிடும். சனி சுக்கிரனுடன் புதனும் இருந்தால் ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில் யோகம், பலரை நிர்வாகம் செய்து சொந்த தொழில் செய்யக்கூடிய யோகம் உண்டாகும். அ

வர்மம் varmam

வர்மங்களின் வகைகள்..! வர்மக் கலையை அகத்தியர் நான்கு பெரும் பிரிவுகளாய் பிரித்திருக்கிறார். உடலில் உள்ள வர்ம புள்ளிகள் மற்றும், அவற்றை கையாளும் விதத்தினால் இவற்றை வேறு படுத்துகிறார். இவை “படு வர்மம்”, ”தொடு வர்மம்”, ”தட்டு வர்மம்”, ”நோக்கு வர்மம்” படுவர்மம் நான்கு வகை வர்மங்களில் மிகவும் ஆபாயகரமான பிரிவு இதுவேயாகும். உடலிலுள்ள வர்மப் பகுதிகளில் அடியோ அல்லது தாக்குதலோ ஏற்படுமானால் அப்போது ஏற்படும் வர்மமே "படுவர்மம்" என்கிறார். இந்த படுவர்ம தாக்குதலுக்கு உள்ளாகும் நபர்கள் உயிரிழக்கும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதால் இவை மிகவும் ஆபத்தானவை என்று அகத்தியர் குறிப்பிடுகிறார். ஒரு மனிதன் படுவர்மப் புள்ளிகளில் அடிபட்டால் உடனடியாக மயங்கி விழுவான் என்றும், அவன் வாய் பிளந்து நாக்கு வெளியே தள்ளும், வாயில் நுரையும் வெளியேறும் அத்துடன் அந்த அடிபட்ட இடங்களில் கைவைத்து பார்த்தால் அந்த இடம் மிகவும் குளிர்ச்சியாகக் காணப்படும் என்றும் குறிப்பிடுகிறார். எல்லோராலும் இதை செய்திட முடியாது என்றும், மிகுந்த பயிற்சி உள்ள ஒருவரால் மட்டுமே இத்தகைய செயல்களை செய்திட முடியும் என்றும் கூறுகிறார். தொடு

அருள்வெளி சித்தர் 108 போற்றி

பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் 108 போற்றி 1. அன்பே உருவான அருள்வேளிக் சித்தனே போற்றி ! 2. அகர முதலாய் அமர்ந்தாய் போற்றி ! 3. அறிவிற் கறிவான ஆதுவிதனே போற்றி ! 4. அறத்தின் வடிவே ஐயனே போற்றி ! 5. அடிமை எமைக் காக்கும் அத்தா போற்றி ! 6. அனாதிப் பரம்பொருள் ஆயினே போற்றி ! 7. அமரர் வணங்கும் அரியே போற்றி ! 8. அண்டினோர்க் காதரவு அளிப்பாய் போற்றி ! 9. அன்பே சிவமேன் றறிந்தாய் போற்றி ! 10. அன்பே சிவமாய் அமர்ந்தாய் போற்றி ! 11. அடக்கம் ஆன  சிவமே போற்றி ! 12. ஆனந்த வடிவச் சித்தனே போற்றி ! 13. ஆகாயம் எல்லாம் அளந்தாய் போற்றி ! 14. ஆதியே போற்றி சோதியே போற்றி ! 15. ஆலத்தை அமுதாய் ஆக்குவை போற்றி ! 16. ஆருரிச் சிவமே அழகா போற்றி ! 17. ஆசை வித்த அரனே போற்றி ! 18. ஆணவ மாயை அழித்தாய் போற்றி ! 19. ஆவியில் உறையும் ஐயா போற்றி ! 20. ஆத்தும தத்துவம் அறிவிப்பாய் போற்றி ! 21. ஆலமர் செல்வ அரசே போற்றி ! 22. இகர மாகி எழுந்தாய் போற்றி ! 23. இறைவி இறைவன் வடிவே போற்றி ! 24. இகபர சுகங்கள் தருவாய் போற்

அளவை முறைகள்

சித்தர்களின் பாடல்களில் குறிப்பிட்டிருக்கும் அளவை முறைகள் குறித்து பலருக்கும் சந்தேகம் இருக்கிறது. சித்தர்களின் பாடல்களில் குறிப்பிட்டிருக்கும் அளவை முறைகளுக்கு ஈடான தற்போதைய அளவைகளை குறித்த சந்தேகங்களுடன் தொடர்ந்து நிறைய மின்னஞ்சல்கள் வந்து கொண்டிருக்கிறது. எனவே அனைவரின் சந்தேகங்களை விளக்கும் பொருட்டும், மற்றவர்கள் அறிந்து கொள்ளவும் இந்த பதிவினை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். முகத்தல் அளவைகள் ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லிட்டர். ஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லிட்டர். ஒரு கலம் = அறுபத்து நாலரை லிட்டர். ஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லிட்டர். ஒரு நெய்க் கரண்டி = தேக்கரண்டி அளவு. ஒரு எண்ணெய்க் கரண்டி = இரு நூற்றி நாற்பது மில்லி லிட்டர். ஒரு பாலாடை = முப்பது மில்லி லிட்டர். ஒரு குப்பி = எழுநூறுமில்லி லிட்டர். ஒரு அவுன்ஸ் = முப்பத்தியொரு கிராம். முன்னூற்று அறுபது நெல் = ஒரு சோடு. ஐந்து சோடு = ஒரு அழாக்கு. இரண்டு ஆழாக்கு = ஒரு உழக்கு. இரண்டு உழக்கு = ஒரு உரி. இரண்டு உரி = ஒரு நாழி. எட்டு நாழி = ஒரு குறுணி. இரண்டு குறுணி = ஒரு பதக்கு. இரண்டு

பிண்ணாக்கீசர்

"கோவணமும் இரவல் கொண்ட தூலம் இரவல் தேவமாதா இரவல் - ஞானம்மா தெரியா அலைவாரே.!" "இட்டர்க்கு உபதேசம் எந்நாளும் சொல்லிடலாம் துட்டர்க்கு உபதேசம் - ஞானம்மா சொன்னால் வருமோசம்.!" - பிண்ணாக்கீசர் - இவருக்கு இரட்டை நாக்கு, அதாவது பிளவு பட்ட நாக்கை உடையவர் இதனால் பிண்ணாக்கர் என அழைக்கப்பட்டார். இடைச்சி வயிற்றில் பிறந்த இவர் சிறந்த தமிழ்ப் புலமை பெற்றவர் என்றும், கர்நாடகத்தில் இருந்தவர் என்றும் போகர் சொல்கிறார். பாம்பாட்டிச் சித்தருக்கு சீடராக இருந்த இவாருக்கு மச்ச முனி சீடராக இருந்ததாக சொல்லப் படுகிறது. இவரது பாடல்களில் ஞானம்மா என விளித்துப் பாடிய பாடல்கள் தான் அதிகம். இவர், பிண்ணாக்கர் மெய்ஞானம் பிண்ணாக்கர் ஞானப்பால் பிண்ணாக்கர் முப்பூச் சுண்ணச் செயநீர் ஆகிய நூல்களை எழுதியதாகச் சொல்லப்படுகின்றது. இவர் கேரளத்திலுள்ள நங்குனாசேரி என்னுமிடத்தில் சமாதியடைந்ததாக சொல்லப் படுகிறது.