புடம் போடுவது என்பது சித்த மருந்தியலின் தனித்துவமான அறிவியல் என்பதை நேற்று பார்த்தோம். புடம் போடுவது என்பது உலை எனப்படும் அடுப்பு, அதில் உருவாக்கப் படும் வெப்பம் என இரண்டு கூறுகளை உள்ளடக்கிய செயல்பாடு.
வெப்பம் என்பது விறகு மற்றும் எரு அல்லது வறண்டு காய்ந்த பசுவின் சாணமான வறட்டிகள் மற்றும் தானியங்களை எரிப்பதன் மூலம் உருவாக்கப் படுகிறது. இவ்வாறு எரிக்கப் படும் தீயின் அளவுகளைக் கூட வரையறுத்திருக்கின்றனர். இந்த அளவுகள் எல்லாம் காலம் காலமாய் வாய்மொழியாவே அடுத்தடுத்த தலைமுறையினருக்கு கற்றுத் தரப் பட்டிருக்கிறது.
விறகினைக் கொண்டு எரிக்கும் போது உருவாகும் தீயின் அளவை நான்கு வகைகளாக குறிப்பிடுகின்றனர்.
மலர்ந்த தாமரை மலரைப் போல எரியும் தீயினை ”கமலாக்கினி” என்கின்றனர்.
துணிப் பந்தம் எரிவது போல உருவாகும் தீயினை “காடாக்கினி” என்கின்றனர்.
குவிந்த வாழைப் பூவினைப் போல எரியும் தீயினை “கதலியாக்கினி” என்கின்றனர்.
அகல் விளக்கின் சுடர் போல எரியும் தீயினை “தீபாக்கினி” என்கின்றனர்.
ஒவ்வொரு வகையான புடத்திற்கும் என்ன மாதிரியான நெருப்பு தேவை என்பது மிக முக்கியமானதாக கூறப் பட்டிருக்கிறது. இந்த பக்குவத்தில் விறகை எரித்தால் மட்டுமே புடம் போடும் செயல் வெற்றியாகும்.
எரியும் தீயின் வெப்பம் ஒரே மாதிரி சீராக இருக்கும் என எதிர்பார்க்க முடியாது. எரியும் விறகின் ஈரத்தன்மை, எரியும் சுடரின் தீவிரம், சுற்றுப் புறத்தில் வீசும் காற்று போன்ற காரணிகள் ஒரே சீரான வெப்பத்தை தராது. இதன் பொருட்டே சீரான வெப்பம் வேண்டி மற்றொரு முறையில் ஆட்டின் எரு மற்றும் மாட்டுச் சாணத்தை காய வைத்து வறட்டியாக பயன் ப்டுத்தினர்.
இந்த முறையில் வறட்டிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து தேவையான வெப்பத்தின் அளவு தீர்மானிக்கப் பட்டது.இதனை அகத்தியர் தனது “அகத்தியர் வாத சௌமியம்” என்ற நூலில் விளக்கமாய் கூறியிருக்கிறார்.
புடம் - வகைகள்
சித்த மருந்தியலில் மருந்துகளை ஒன்றோடு ஒன்று பிணைக்கவும், தேவையான மருந்தினை மட்டும் தனியே பிரித்து எடுக்கவும் புடம் போடுதல் செய்யப் படுகிறது. சில வகையான மருந்துகளுக்கு நீடித்த கூடுதல் வெப்பமும், தீயானது நேரடியாக மூலகங்களின் மீது படாமல் இருக்க வேண்டும்.அம்மாதிரியான செயல் முறைகளுக்கு பசுவின் சாணத்தைக் கொண்டு தயாரிக்கப் பட்ட வறட்டிகளைக் கொண்டு புடம் போட்டனர்.
இந்த வறட்டிகளின் எண்ணிக்கையை வைத்து இந்த புடங்களுக்கு பெயரிடப் பட்டுள்ளது. அகத்தியர் தனது "அகத்தியர் வாத சௌமியம்" என்னும் நூலில் இது பற்றி தெளிவாக விளக்கியிருக்கிறார்.
ஆமப்பா புடந்தனக்கு நிதானங்கேளு
அப்பனே காடையது எருவென்றாகும்
நாமப்பா கவதாரி எருமூன்றாப்பா
நன்மையுள்ள குக்குடந்தான் எருபத்தாகும்
நாமப்பா வராகபுடம் எருஐம்பதாகும்
தயவான கனபுடந்தான் எருநூறாகும்
ஓமப்பா கெஜபுடந்தான் ஆயிரமுமாகும்
உத்தமனே கைமுறையாய்ப் புடமாய்ப்பாரே
- அகத்தியர்.
ஒரு வறட்டி கொண்டு போடப்படும் புடத்தினை “காடைப் புடம்” என்றும், மூன்று வறட்டிகளை பயன்படுத்தினால் அதை ”கௌதாரிப்புடம்” என்றும், பத்து வறட்டிகளை கொண்டு போடப் படும் புடத்தினை “குக்கூபுடம்” (சேவற்புடம்) என்றும், ஐம்பது வறட்டிகளைக் கொண்டு போடப் படும் புடத்தை “வராக புடம்” (பன்றிப்புடம்) என்றும், நூறு வறட்டிகளைக் கொண்டு போடும் புடத்தினை “கனபுடம்” என்றும், ஆயிரம் வறட்டிகளைக் கொண்டு போடும் புடத்தினை “கஜபுடம்” (யானைப்புடம்) என்றும் அகத்தியர் வரையறுத்திருக்கிறார்.
இவை தவிர தொன்னூறு வறட்டிகளைக் கொண்டு போடப்படும் புடத்திற்கு “மணல் மறைவுப்புடம்” என்று பெயர்.
வறட்டியை பயன்படுத்தாமல் ஆட்டின் எருவைக் கொண்டு போடும் ஒரு புட முறையும் உண்டு. அதை “பூமிப்புடம்” என அழைப்பர். நான்கு விரற்கடை அளவுக்கு ஆட்டின் எருவை இடுவதன் மூலம் இந்த முறையில் புடம் போடுவதுண்டு.
நெருப்பினை நேரடியாக பயன்படுத்தாமல், மறைமுகமாய் வெப்பம் உருவாக்கும் சில புட வகைகளும் உண்டு.
உமிப்புடம் - இது இரண்டு வகைப்படும். ஒன்று புடமிடவேண்டிய பொருட்களை உமியில் புதைது வைத்து எடுத்தல், மற்றையது உமியால் எரித்து புடமிடுதல்.
தானியப்புடம் - தேவையை பொறுத்து நெல்லுக்குள் அல்லது வேறு குறிப்பிட்ட தானியத்திற்குள் புதைத்து வைத்து எடுத்தல்.
சூரியப்புடம் - சூரிய ஒளியில் காயவைத்து எடுத்தல்.
சந்திரப்புடம் - நிலவின் ஒளியில் வைத்து எடுத்தல்.
பருவபுடம் - பௌர்ணமி அன்று திறந்த வெளியில் மருந்துகளை வைத்து எடுத்தல்.
அமாவாசைப் புடம் - அமாவாசை அன்று திறந்த வெளியில் மருந்துகளை வைத்து எடுத்தல்.
பனிப்புடம் - பனி பொழியும் வேளையில் புடமிட வேண்டிய பொருட்களை பனியில் வைத்து எடுத்தல்.
பட்டைப்புடம் - குறிப்பிட்ட மரத்தை துளைத்து அதனுள் புடமிடவேண்டிய பொருளை வைத்து அதே மரத்தின் தூள்களால் மூடி குறிப்பிட்ட நேரம் அல்லது சில நாட்கள் கழித்து எடுத்தல்.
இவை தவிர சூட்சுமமான புட வகைகளும் உண்டு. அவை “மனிதப்புடம்”, “குருப்புடம்” எனப்படும். அவற்றை குருமுகமாய் அறிவதே சிறப்பு.
புடம் - வகைகள்
உமிப்புடம் - இது இரண்டு வகைப்படும். ஒன்று புடமிடவேண்டிய பொருட்களை உமியில் புதைது வைத்து எடுத்தல், மற்றையது உமியால் எரித்து புடமிடுதல்.
தானியப்புடம் - தேவையை பொறுத்து நெல்லுக்குள் அல்லது வேறு குறிப்பிட்ட தானியத்திற்குள் புதைத்து வைத்து எடுத்தல்.
சூரியப்புடம் - சூரிய ஒளியில் காயவைத்து எடுத்தல்.
சந்திரப்புடம் - நிலவின் ஒளியில் வைத்து எடுத்தல்.
பருவபுடம் - பௌர்ணமி அன்று திறந்த வெளியில் மருந்துகளை வைத்து எடுத்தல்.
அமாவாசைப் புடம் - அமாவாசை அன்று திறந்த வெளியில் மருந்துகளை வைத்து எடுத்தல்.
பனிப்புடம் - பனி பொழியும் வேளையில் புடமிட வேண்டிய பொருட்களை பனியில் வைத்து எடுத்தல்.
பட்டைப்புடம் - குறிப்பிட்ட மரத்தை துளைத்து அதனுள் புடமிடவேண்டிய பொருளை வைத்து அதே மரத்தின் தூள்களால் மூடி குறிப்பிட்ட நேரம் அல்லது சில நாட்கள் கழித்து எடுத்தல்.
இவை தவிர சூட்சுமமான புட வகைகளும் உண்டு. அவை “மனிதப்புடம்”, “குருப்புடம்” எனப்படும். அவற்றை குருமுகமாய் அறிவதே சிறப்பு.

Comments
Post a Comment